வியாழன், 15 ஆகஸ்ட், 2019

திருக்கோத்தும்பி (பாம்பன் சுவாமிகள் மாத இதழில் பிரசுரிக்கப் பட்டது)


சென்றூதாய் கோத்தும்பி

தமிழ்த் திருமுறைகளில் எட்டாம் திருமுறையாக வைத்துப் போற்றப் பெறுவது மாணிக்கவாசகப் பெருமான் அருளிய திருவாசகமும், திருக்கோவையாரும்  ஆகும். திருவாசகம் பூசைக்குரிய நூல். சைவ மரபில் சிவபூசை செய்ய இயலாதவர்கள்  திருவாசக பூசை செய்வதென்பது ஒரு பழங்கால மரபாகும். திருவாசகத்தை நாம் ஒரு பக்தி இலக்கியம் என்று சொல்வதும் இல்லை, சொற்களுக்கு தனித் தனியே பொருள் காண்பதும் வழக்கம் இல்லை. மணிவாசகப் பெருமான் தன் இறை உணர்வை, தான் உணர்ந்த இறை அனுபவத்தை நமக்குச் சொல்ல முற்படுகிறார். ஆகையால் இது ஒரு இறை அனுபவ நூலாகக் கருதப்படுகிறது.திருவாசகத்துக்கு உருகாதார் ஒரு வாசகத்திற்கும் உருகார்என்ற  நம்மிடையே நிலவும் வழக்கு, இந்த ஞான நூல் ஒரு அனுபவ விளக்கம் என்பதை நமக்கு உணர்த்துகிறது.
திருவாசகச் சிறப்பு:
வள்ளல் பெருமான் திருவாசகத்தை தன் வழி நூலாகக் கொண்டு, தன் சிரசின் குடுமியிலே ஒரு ஓலைச்சுருளில் எழுதி எப்போதும் தாங்கி நின்றார் என்பது நாம் அறிந்த ஒன்றாகும். வள்ளல் பெருமான்,
“ வாட்டமிலா மாணிக்க வாசகநின் வாசத்தைக்
கேட்டபொழு தங்கிருந்த கீழ்ப்பறவைச் சாதிகளும்
வேட்டமுறும் பொல்லா விலங்குகளும் மெய்ஞ்ஞான
நாட்டமுறும் என்னில்இங்கு நானடைதல் வியப்பன்றே.                                                                                                                            4-12-10 (ஆளுடைய அடிகள் அருண் மாலை)
திருவாசகத்தை ஓதி ஞானம் பெற்றது விந்தையல்ல என்று  கூறி, நூலின் சிறப்பை உரைக்கின்றார்.
ஊற்றா  யமுதை உடையவன் தன்னை
ஆற்றா தெண்ணி அழுதே அனுபவ
வாசகம் தந்த வாதவூர் ஐய்யவுன்
வாசகந் தானுமோர் வற்றா ஊற்றே
ஊற்றினில் இவ்விதம் உருக்கம் ஊறுமோ
ஆற்றினில் இவ்விதம் அன்பு பாயுமோ
அழுவதில் இவ்வித ஆனந்தம் உண்டோ
தொழுவதில்  தூங்காத்  துணிவுமொன்  றுண்டோ
ஐயா உனையளந் தறிய
மெய்யாய் மேலும் வேண்டும்பல் பிறப்பே. 
என்று துறைமங்கலம் சிவப்ரகாச சுவாமிகள், திருவாசகம், உருக்கம் ஊறும், அன்பு பாயும், ஆனந்தம் உண்டாக்கும், ஒரு வற்றா ஊற்றான அநுபவ வாசகம் என்று  விளக்குகிறார்.
பெருந்துறை புகுந்து பேரின்ப வெள்ளம்
மூழ்கிய புனிதன் மொழிந்த வாசகமே
வாசகம் அதற்கு வாச்சியம்
தூசகல் அல்குல்வேய்த் தோள் இடத் தவனே      (நால்வர் நான்மணிமாலை - 8)

நூல் என்றால் அது திருவாசகம் என்றும், அதன் பொருள் என்றால் தில்லைக்கூத்தனே என்றும் அவர் உறுதிபடக் கூறுகிறார்.
                                                                                                                                                          
வாதவூ ராளிதனை வான்கருணை யால்விழுங்கும்
போதவூ ரேறேநின் பொன்னடியுங் காண்பேனோ.     (46 -11 தாயுமானவர் பாடல்கள்)
என்பது தாயுமானசுவாமிகளுடைய ஐயம்.
இறைவனை அடைய நான்கு மார்க்கங்கள் (சரியை, கிரியை, யோகம், ஞானம்) என்று நம் திருமுறைகள் நமக்கு உணர்த்தினாலும், அழுதால் அவனைப் பெறலாம் என்ற எளிய வழியை நமக்கு உணர்த்தியவர் மணிவாசகப் பெருமான். இவ்வாறு திருவாசகத்தின் சிறப்பை நாம் நீள  முழங்கிக் கொண்டே இருக்கலாம்.
திருவாசகம் 658 பாடல்கள் கொண்ட 51 பதிகங்கள்  அமைந்த அருள்நூல். முதலில் அமைந்துள்ள நான்கு அகவல்களும் நான்கு பதிகங்களாகக் கொள்ளப்பட்டு மேற்சொன்ன  658 பாடல்கள் வரையறுக்கப்பட்டன.  இந்த பதிகங்களுள், நாம் சிறிது விரிவாகக் காண இருப்பது பத்தாவது பதிகமானதிருக்கோத்தும்பிஎன்பதாகும்.
 வண்டு, சுரும்பு, தேன்,ஞிமிறு என்ற நான்கு வகையான தேனீக்களில் தும்பி என்பது ஒரு தேனி வகையைச் சேர்ந்தது. இந்த நான்கு வகையுள் வண்டும், தேனும், நறுமணமுள்ள மலர்களை நோக்கிச் சென்றே தேன் உண்ணும். மற்ற இரண்டும் எல்லா மண மலர்களையும்  தேடிச் செல்வன. இங்கு தும்பி நல் நாற்றத்தை நாடிச் செல்லும் ஒருவகை வண்டு. கோஎன்பதற்கு அரசு என்று பொருள் கொண்டோமானால், இது தலைமை வண்டாகக் கருதிகோத்தும்பிஎன்று சிறப்பிக்கப்பட்து.திருஎன்ற சிறப்பு அடைமொழி கொடுத்துதிருக்கோத்தும்பிஎன்றார் மணிவாசகப் பெருமான்.
வண்டை மையமாக வைத்து பாடப் பெற்ற இப்பதிகம் நமக்கு பல கருத்துக்களைத் தெரிவிக்கிறது.
மணிவாசகப் பெருமான் தன்னுடைய பிரிவாற்றாமையை, தன்னை இன்னும் இறைவன் அழைத்துச் செல்லவில்லையே என்ற ஏக்கத்தை  பல பதிகங்களில் பதிவு செய்கிறார்.  தலைவனை சென்று சேரத்துடிக்கும் தலைவியாகவே தன்னை உருவகம் செய்து, வண்டைத் தூது அனுப்புவதாகத்தான்  இந்தப் பதிகமும் எண்ணப்படுகிறது. ஆனாலும் தூது என்ற பொருள் கொள்ளும் இலக்கணம் ஒரு பாட்டில்தான்  (பாடல் எண் 13 ) நமக்கு கிடைக்கிறது. மற்ற பாடல்கள் சிவபெருமானின் பெருமைகளை வண்டிற்கு உரைத்து, இத்துணை பெருமை கொண்ட  பெருமானின் திருவடிகளில் சென்று  பேரானந்த தேனைப் பருகுவாயாக என்று கூறுவதாகத்தான் அமைந்துள்ளது. மற்றும்ஊதாய்  என்பதற்குவிண்ணப்பம் செய்வதுஎன்று பொருள் கொண்டோமானால், எல்லாப் பாடல்களும் தூது இலக்கணத்தின் கீழ் கொள்ளலாம்.
இருப்பினும் இந்த வண்டானது இறைவனுடைய திருவடியைச் சென்று ஒலிக்கும்போது, தலைவி தனியாகச் செய்தி ஏதும் சொல்லி அனுப்பாவிட்டாலும், அதன் நறு மணத்தையும், பிற குணங்களையும் கண்டு, அந்த வண்டு தன்னிடத்திலிருந்து வரும் வண்டு என்பதை தலைவன் புரிந்து கொள்வான், என்று தலைவி சொல்வதாகக் கருத்தில் கொள்ளவேண்டும்.
 மணிவாசகப் பெருமான் தில்லையில் மலர் கொய்வதற்காக வனத்திற்குச் செல்கிறார். அங்கே வண்டுகள் ஒலி எழுப்பிக்கொண்டு, பூக்கள்தோறும் சென்று தேன் எடுப்பதைக் காண்கிறார். ஒவ்வொரு மலரிலும் சிறிதளவு தேனே கிடைப்பதால், தனக்கு வேண்டும் அளவு தேன் சேகரிக்க பல மலர்களை நாடி வண்டு ரீங்காரமிட்டுத் திரிகிறது. அப்பொழுதும்கூட அவற்றின் வயிறு நிரம்புவதாகத் தெரியவில்லையாம்.  இந்த ரீங்காரத்தின் பயன் உணவைத் தேடி உண்பது. இந்த உணவாகிய இன்பம் நிலையானது இல்லை. ஆகவே நீ நிலையான இன்பத்தைத் தரும் சிவபெருமானை நோக்கி ஒலி எழுப்புவாயாக என்று வண்டிற்குச் சொல்வதாக இப்பாடல்களை அமைத்தார்.
மேலும் இவ்வண்டுகளை உலகியலாருடன் ஒப்பிட்டு, பல சிறு தெய்வங்களை வழிபடுவார்க்கு கிடைக்கும் இன்பம் சிறிதளவேயாம். அவர்களுக்கு வீடு பேறும் கிட்டுவதில்லை. மற்றும் உலக இன்பத்தை பெரிதெனக்கொண்டு, ஐம்பொறிகளால் கிடைக்கும் நுகர்வுகளை  பெரிதெனக் கருதி உழல்கின்றனர். பரம்பொருளாகிய சிவனாரின் கழல்களைப் பற்றி நிலையான பேரின்பத்தை பெற்று உய்யுங்கள் என்ற உண்மையை வண்டை  உலக உயிர்களுக்கு உருவகப்படுத்தி , நமக்கு உணர்த்துகிறார்  மணிவாசகப் பெருமான்.
திருவாதவூரர் புராணத்தில், மலர்களைச் சுற்றும் வண்டுகளை நோக்கி, நீ என் நாயகனின் திருவடிக் கமலங்களில் சென்று ஊதுவாயாக ( ஞாங்கரின் முரலும் தும்பி தன்னையும் நயந்து நாதன் பூங்கழல் வழுத்துக என்று புனித கோத்தும்பி சொன்னார்) என்று கூறியதாகக் குறிப்பு கொடுக்கப்படுகிறது.
இவ்வாறு அனைத்து பாடல்களையும் வண்டை மையமாக வைத்து, கோத்தும்பி என்று முடியுமாறு பதிகம் அமைந்துள்ளது.  வண்டுகள் ரீங்கார ஒலி எழுப்புவதைஊதாய்என்று குறிக்கப் படுகிறது. ஒலி எழுப்பி திருவடிகளைச் சார்ந்து, சிவ பெருமணத்தை நுகர்ந்து ஒன்றிவிடுவாய் என்று வண்டின் நிலை இங்கே காட்டப்படுகிறது. வண்டுகளாகிய உலகியல் ஆன்மாக்கள், சிவபரம்பொருளைச் சார்ந்துவிடுவதைசிவனோடு ஐக்கியம்என்றார். இந்நிலை, உயிர் சிவபெருமானோடு இரண்டறக் கலந்து, வேற்றுமை இன்றி ஒன்றுபட்டு நிற்கும் நிலை. இந்நிலை இங்கு சிவானுபவத்தைக் குறிக்கும். இதுவே திருக்கோத்தும்பி பதிகத்தின் மையக் கருத்தாக அமைகிறது.
சிவனோடு ஐக்கியம்என்ற இக்கருத்து எவ்வாறு விளக்கப்படுகிறது என்பதை ஒருசில பாடல்களை கூர்ந்து நோக்கி உணருவதே இக்கட்டுரையின் நோக்கம்.
பூவேறு கோனும் புரந்தரனும் பொற்பமைந்த
நாவேறு செல்வியும் நாரணனும் நான்மறையும்
மாவேறு சோதியும் வானவருந் தாமறியாச்
சேவேறு சேவடிக்கே சென்றூதாய் கோத்தும்பீ

இது பதிக முதல் பாடல். சேவடிப் பெருமை இப்பாட்டில் அறிவிக்கப்படுகிறது.முதல் மூன்று அடிகளில் இறைவனைக் காண முடியாமல் போனவர்கள் யார்,யார் என்பதை பட்டியலிட்டுக் காட்டுகிறார்.

பூவேறு கோனும்தாமரை மலர் மீது அமர்ந்துள்ள நான்முகனும்வேதங்களை முறையே ஓதி, நூலறிவில் சிறந்தவன் என்பதால் அவனை முதலாக  வைத்தார்.
புரந்தரனும் பகைவர்களின் நகரங்களை அழிப்பவனாகிய இந்திரனும்
பொற்பமைந்த நாவேறு செல்வியும் நான்மறைகளை ஓதியதால் பொலிவு பெற்ற நாமகனின் நாவில் கல்விச் செல்வமாய் குடிகொண்டு அமர்ந்துள்ள ,அழகு நிறைந்த கலைமகளும்,
ணனும் நாராயணனும்
நான்மறையும்நான்கு மறைகள் என்று சொல்லப்படுகின்றவைகளும்இறைவன் ஆழ்ந்து அகன்ற  நுண்ணியனாதலால், அவனுடைய இயல்புகள் அனைத்தையும் வேதங்கள் அறியமாட்ட என்ற பொருள் கொண்டு,
மாவேறு சோதியும் மா என்பது விலங்கின் பொதுப்பெயர். இங்கு ஆட்டை உணர்த்திற்று. ஆட்டை ஊர்தியாகக் கொண்ட அக்கினி என்பதை மா ஏறு சோதி என்று குறித்தார். அக்கினியும் காண இயலாத திருவடி என்று, வேறு எங்கும் சொன்னதாகத் தெரியவில்லை. சிவ வேள்விகளில் அளிக்கப்படுகின்ற அவி முதலியவற்றை அவரவரிடம் கொண்டு போய் சேர்ப்பது அக்கினி. அவ்வாறே சிவபெருமானுக்கு  வேள்வியில் அளிக்கப்படும் அவி அவனைச் சென்றடைவது அக்கினியின் மூலமாக. அவியை அளிக்கச் சென்றபோதுகூட , மறைபொருளாக இருந்துதான்  பெற்றுக் கொள்கிறானே  அல்லாமல் அக்கினிக்கு திருவடி காட்சி கொடுக்கவில்லை என்பதை இங்கு மணிவாசகப் பெருமான் எடுத்துரைக்கிறார். மா  என்பதை விடை என்று கொண்டு, இது உருத்திரனைக் குறிக்கும் என்றும் சில இடங்களில் பொருள் சொல்லப்படுகிறது. இடபத்தில் ஏறி வரும் உருத்திரனும், திருவடியைக் காண இயலவில்லை என்பது அவ்வளவு பொருத்தமாகாது என்று விளக்கம் சொல்வாரும் உண்டு.
வானவரும் -  ஏனைய தேவர்கள்.

இவ்வாறு பட்டியலிட்டபின் பாடலின் நான்காவது வரியில், வண்டு செய்ய வேண்டியது என்ன என்பதைக் குறிப்பிடுகிறார்.
சேவடிக்கே சென்றூதாய்நான்முகன் முதலாக உள்ள அனைவரையும் விட்டு, சிவபெருமானின் திருவடியைக் கண்டு நீ ஒலிப்பாயாக என்ற கருத்தை வலியுறுத்த சேவடிக்கேஎன்ற  ஏகாரம் இடம் பெற்றது இங்கு.

மற்றவர்களைப் பார்த்து மயங்காமல், சிவனடியின் நறுமணத்தை அடையாளம் கண்டு, சென்று, அத்திருவடியில் பெருகும் வீட்டின்பமாகிய தேனை பருகத்தொடங்குவாய், உன் ஒலி குறையும், பின் உன்னையும் மறந்துவிடுவாய், ஆனால்  வீட்டின்பத் தேன் பருகுவது மட்டும் தொடரும். இவ்வாறு சேவடியை சென்று ஒன்றி விடுவதால் இது சிவனோடு ஐக்கியமாயிற்று.

வெளிப்படையாக துது செல்லும் இலக்கணத்தை உடைய 13ம் பாடலை இப்போது காணலாம்.

நான்தனக் கன்பின்மை நானும்தா னும்அறிவோம்
தானென்னை ஆட்கொண்ட தெல்லாருந் தாமறிவார்
ஆன கருணையும் அங்குற்றே தானவனே
கோனென்னைக் கூடக் குளிர்ந்தூதாய் கோத்தும்பீ…………13

எனக்கு அவன் மேல் அன்பில்லை என்பதை நான் அறிவேன், இறைவனும் என் அன்பின்மையை அறிவான். அவ்வாறு  மனத்தின்கண் அன்பில்லாத என்னை அவன் திருப்பெருந்துறையில் வந்து ஆண்டுக்கொண்டதை அனைவரும் அறிவார். என்மாட்டு அவன் மதுரையில் நடத்திய திருவிளையாடல்களை அடியார்கள் மட்டுமின்றி, மக்களும் அறிவர். இவ்வாறு அவன் தானே வந்து என்னை ஆட்கொண்டது அவன் கொண்ட பெருங்கருணையால்தானே அன்றி, என் அன்பினால் விளைந்ததன்று.

இப்போதும் நான் பாசத்தால் கட்டுண்டவன். நானே சென்று அவனை அடைய முடியாது. ஆகையால், வண்டே, நீ அவனிடம் சென்று, அவனே என்னிடம் வந்து, மீண்டும் என்னைத் தன்னுடன் சேர்த்துக்கொள்ளுமாறு  விண்ணப்பம் செய்வாயாக, என்று கூறுகிறார்.

இறைவனிடம் சென்று, என்னை சேர்த்துக்கொள்ளுமாறு சொல் என்றதனால், இப்பாடல் தூது இலக்கணத்திற்கு உட்பட்ட பாடல் என்று முன்னமே குறிக்கப்பட்டது.

மற்றும், ‘என்னைக் கூட குளிர்ந்து ஊதுகஎன்றதனால், சிவனோடு ஐக்கியம் எனக்குத் தேவை என்று உரைப்பதாகக் கொள்ளலாம்.

நாவுக்கரசுப் பெருமானும் இக்கருத்தை ஒரு  பாடலில் வலியுறுத்துகிறார்.

ஏன்றுகொண் டாயென்னை யெம்பெரு மானினி யல்லமென்னில்
சான்றுகண் டாயிவ் வுலகமெல் லாந்தனி யேனென்றெனை
ஊன்றிநின் றாரைவர்க் கொற்றிவைத் தாய்பின்னை யொற்றியெல்லாம்
சோன்றுகொண் டாய்கச்சி யேகம்ப மேய சுடர்வண்ணனே. (4-99-9)
தூது இலக்கணத்திற்கு உட்பட்ட பாடல் என்றதனாலோ என்னவோ, இப்பாடலில் இறைவனின் திருவடிப் பெருமையைப் பற்றிக் கூறாமல், அவனுடைய கருணை உள்ளத்தைக் குறிப்பிட்டு, அவன்தான் என் தலைவன், ஆகையால் நீ என்னைத் சேர்த்துக்கொள்ளுமாறு அவனிடம் சென்று ஓதுவாய் என்கிறார்.  இது ஒரு தன்னிலை விளக்கம்போல் அமைகிறது என்று சொன்னால் தவறில்லை என்றே தோன்றுகிறது.

மற்ற 19 பாடல்களில்  , இறைவன்  புகழை வண்டுக்குச் சொல்வதுபோல்  அமைந்துள்ள இறுதி வரிச் சொற்களை நாம் கீழே காணலாம்.

1. ‘தாமறியாச் சேவேறு சேவடி’
2. ‘ஊனார்  உடை தலையில் உண்பலிதேர் அம்பலவன் தேனார் கமலம்’
3. ‘அனைத்து எலும்பும் புண்ணெக ஆனந்தத் தேன் சொரியும் குனிப்புடையான்’
4. ‘வான்கருணைச் சுண்ணப்பொன் நீற்றர்’
5. ‘மெய்த்தேவர் தேவர்’
6. ‘சித்த விகாரக் கலக்கம் தெளிவித்த வித்தகத் தேவர்’
7. ‘சிட்டாய சிட்டன்’
8. ‘குன்றாத செல்வர்’
9. ‘மயக்கறுத்த கருணைக் கடல்’
10.‘தன் கருணை தேயுற்ற செல்வர்’
11.‘பொன்னம் கழல்’
12.‘தாயான ஈசன்’
14.‘திருவான தேவர்’
15.‘வானும், திசைகளும்,மாகடலும் ஆய பிரான் தேனுந்து சேவடி’
16.‘பிரானுக்கே’
17.‘செய்யார் மலரடி’
18.தொன்மைக் கோலத்தை முழுதும் விவரிப்பது
19.‘தெள்ளுங்கழல்’
20.‘தீ மேனியான்’

இத்தகைய பெருமைகளைக் கொண்ட இறைவனிடம் சென்று தேன் என்ற பேரின்பத்தை நீ கொள்வாயாக  என்று உலகியலாருக்கு வண்டை உருவகம் செய்து சொல்கிறார். இறைவனின் பெருமையை முற்றிலும் தம் அநுபவ வாயிலாக உணர்ந்ததை மணிவாசகப் பெருமான்  நமக்கு சொல்ல வருகிறார். இப்பதிக பாடல்களை முற்றிலும் கற்றுணர்ந்து, அடியார்கள் அனைவரும்,  அவனைப் பற்றி, அவனருளைப் பெற வேண்டுகிறோம்.

திருச்சிற்றம்பலம்