புதன், 10 மே, 2017

நம்பி ஆரூரரின் தில்லைக்காட்சி


நான் எழுதிய  கீழ்க்கண்ட  கட்டுரை "பாம்பன் சுவாமிகள்" என்ற மாத இதழில், ஏப்ரல் மாதத்தில் வெளியாகியது.
சிவாயநம
நம்பி ஆரூரரின் தில்லைத் திருக்காட்சி
மூவர் முதலிகளில் ஒருவராகிய  சுந்தரமூர்த்தி சுவாமிகள் அருளிய திருத்தொண்டத் தொகையை மூல நூலாகக் கொண்டு, அடியார்கள் பெருமை சொல்லும் பெரியபுராணத்தை உருவாக்கம் செய்தார் சேக்கிழார் சுவாமிகள். இன்னூலை  காப்பிய வடிவிலே கொடுத்தார். காப்பியத் தலைவனாக சுந்தரமூர்த்தி சுவாமிகளையும். தலைவியர்களாக சங்கிலியாரையும், பரவையாரையும் கொண்டார்.  இவரின் வரலாறு அறுபதின்மருடைய கதைகளினூடே  இயைந்து எழுதப்பட்டுள்ளது. இதன் காரணமாகவே காப்பிய இலக்கணம்  காக்கப்படுகிறது.
சுந்தரமூர்த்தி சுவாமிகள் இப்பூஉலகில் தோன்றக் காரணம் இறைவனின் ஆணையாகும்.
திருமலையில்  அனிந்திதை, கமலினி என்ற இரு சேடியர் மலர் கொய்ய வந்தபோது, அவர்கள்பால் மனம் வைத்ததால்தென்புவி மீது தோன்றி அம் மெல்லியலாருடன் காதல் இன்பம் கலந்து அணைவாய்என்றது இறைவன் இட்ட ஆணையாகும். இது தூல காரணம். தென்திசை வாழவும், அடியார்களின் பெருமையைச் சொல்ல திருத்தொண்டத்தொகை அருளவும் அவர் மாதர் இருவரின் மேல் மனம் போக்கினார் என்பது சூக்கும காரணம்.
அவருக்குத் திருமணம் செய்ய இருந்த சடங்கவியார், இவர்கள் இருவரின் வேறானவர் ஆகையால் இறைவன் அவரைத் தடுத்தாட்கொண்டார். பின் திருவெண்ணெய்நல்லுர் சென்று இறைவன் அருள் பெற்றுபித்தாஎன்று தொடக்கம் பெற்று பதிகங்கள் பாடினார். பின் திருநாவலூர் சென்றார். திருத்துறையூர் இறைவரை வணங்கி தமக்கு தவநெறி வேண்டிப் பாடி பெற்றார். அங்கிருந்து தில்லைக் கூத்தனின் ஆனந்த நடனத்தைக் கண்டு மகிழும் ஆசையினாலே தில்லையை நோக்கிச் செல்கிறார்.
திருவதிகை,திருமாணிக்குழி,திருத்தினை நகர் ஆகிய தலங்களை தரிசித்து, நம்பி ஆரூரர்  தில்லை அம்பலவனை தரிசிக்க பேராவல் கொண்டு தில்லையம்பதியை நொக்கிச் செல்கிறார்.
தில்லையின்  எல்லையைப் பணிந்து எழுகிறார். எல்லையை வணங்கி எழுவதைக் குறிக்கும்போது சேக்கிழார் சுவாமிகள், தில்லையினுடைய எல்லையே தன்னைத் தொழுவார்க்கு இருளகற்றி முத்தி தர வல்லது என்று .
“………தன்ம ருங்குதொழு வார்கள்தம் மும்மை 
மாம லங்களற வீடருள் தில்லை 
மல்ல லம்பதியி னெல்லை வணங்கி.      என்று சிறப்பித்துக் கூறுகிறார்.
பின்  இறைவன் பூசனைக்குப் பயன்படும் பல வகையான மரங்கள் அடர்ந்த பகுதியைக் கடந்து தில்லையின் உள் புகுகிறார். பூசனைக்கு உரிய  பூக்களை அளிக்கும் செழுமையான நந்தவனங்களைக் கடந்து வீதியில் நுழைகின்றார்.  புண்ணியம் செய்வார்க்கு பூவுண்டுஎன்ற சொல்லின்படி, மிகப் புனிதமான உயிர்களே, சிவபூசைக்குறிய மரம், செடி கொடிகளாக நின்றுக்கொண்டிருப்பதால், அவை சிவபுண்ணியப் பொருள்களாகும். ஆகையினாலே அவற்றையும் வணங்கிப் பணிந்து செல்கிறாராம் நம் நம்பி.
கோயிலின் நான்கு புறங்களையும் சூழ்ந்துள்ள கடல் போன்ற அகழிகளையும் கண்டு மகிழ்ந்து மேலே செல்கிறார். விசேட நாட்களில் அடியவர்கள் சூழ, கடல் தீர்த்தத்திற்கு  எழுந்தருளும்போது, அந்த அடியவர்களை வணங்கும் பேறு தமக்கு எந்நாளும் தொடர்ந்து கிடைக்க வேண்டும் என்று எண்ணிக் கொண்டே செல்கிறார்.
ஆழமான அகழியிலிருக்கும் தாழம்பூ விலுள்ள மகரந்தப் பொடியில் வீழ்ந்து எழுந்த வண்டுகள் தாமரை மலர்களை நோக்கிச் செல்வது, ஒளி மிகுந்த திருநீறு அணிந்துக் கொண்டு அடியவர்கள் இறைவனிடம் சென்று போற்றி மகிழ்வது போன்று இருந்ததாம். நம்பி ஆரூரரும் அன்போடும், பக்தியோடும் அவைகளைக் கண்டு செல்கிறாராம்.
நம்பி ஆருரருக்கு தில்லைக் காட்சிகள் தென்படுகின்றன. அங்கே வேதகோஷங்கள் முழங்குகின்றன, வெண்மையான கொடிகள் அசைந்து, அவற்றால் ஏற்படும் மணியின் ஓசைகள் நான்கு திசைகளிலும் ஒலித்துக் கொண்டிருக்கின்றன, மாலைகள் அணிந்த அகன்ற மார்பை உடைய பிரம்மதேவனின் அழகிய நான்கு முகங்கள் போன்று அமைந்துள்ள கோயிலின் நான்கு வாயில்களில் ஒன்றான வடக்கு வாயிலில் வந்து நிற்கிறார் சுந்தரர்.
சுந்தரரின்  வரவு கேட்ட அடியார்கள் அனைவரும் அன்பின் மிகுதியால் வடக்கு வாயிலில் திரண்டனர். அவர்கள் ஒருவருக்கொருவர் வணங்கிய முறையை சேக்கிழார் பெருமான், “……….முன்பு இறைஞ்சினர் யாவரென்று அறியா முறைமையால் எதிர் வணங்கி மகிழ்ந்து, பின்பு கும்பிடும் விருப்பின் நிறைந்து.  என்று குறிப்பிடுகிறார். அடியார்களும், நம்பி ஆரூரரும், ஒரே நேரத்தில்  ஒருவரை ஒருவர் வணங்கினார்கள். இவர்களில் எவர் முன்னே வணங்கினார்கள் என்பது அறியப்படவில்லை. இதுவே ஒரு அடியவரைக் காணும்போது வணங்கும் முறை என்பதாகும் என்று விளக்குகிறார்.
திருவீதி புகுதலை சேக்கிழார் பெருமான், “. .பொருவிறந்த திருவீதி புகுந்தார் என்று ஒரு தனிச் செய்தியாக எடுத்துக் கூறுகிறார். ஒப்பற்ற திருவீதிகள் என்பது ஆசிரியரின் கூற்று. ஞானசம்பந்த பெருமான் தில்லை சென்று திருவீதிகளைத் தொழுது, பின் அங்கே தங்கியிருக்க அஞ்சி, திருவேட்களம் சென்று தங்கியதாக பெரியபுராணத்தின் வாயிலாக நாம் அறியலாம்.
செல்வத் திருமுன்றில்  தாழ்ந்தெழுந்து தேவர்குழாம்
மல்குந் திருவாயில் வந்திறைஞ்சி மாதவங்கள்
நல்குந் திருவீதி  நான்குந் தொழுதங்கண்
அல்குந் திறம்அஞ்சு வார்சண்பை ஆண்டகையார்” – (பெ.பு. 2063)

வீதிகள் சிவமே நிலவிய திருவீதிகள். ஆகையால், தவத்தின் பயனை அவைகளே நல்குவதாலும் மாதவங்கள் நல்கும் திருவீதி என்றார்.

“…….அப்பொழுதே அம்பலத்துள் ஆடுகின்ற 
   
கழல்வணங்கி அருள்முன் பெற்றுப் 
பொய்ப்பிறவிப் பிணியோட்டுந் திருவீதி 
   
புரண்டுவலங் கொண்டு போந்தே……. (பெ.பு. 1444)

பொய்யான இம்மானிடப்பிறவியாகிய நோயைப் போக்கும் அழகிய திருவீதி என்று, அத்திருவீதியில் புரண்டு எழுந்தாராம் நாவுக்கரசு பெருமான்.

சிவந்த பொன்னாலாகிய பொன்னம்பலத்தையும், ஒளி பொருந்திய பேரம் பலத்தையும் வலம் செய்து வணங்கிய பின்பு, உட்சென்று வணங்குதற்காக, பேரழகுடன் ஒளி சூழ்ந்த திருச் சிற்றம்பலத்தின் முன்னுள்ள திருஅணுக்கன் என்னும் முதல் திருவாயிலை அடைந்தார் நம் சுந்தரர்.

வையகம் பொலிய மறைச்சிலம் பார்ப்ப 
             மன்றுளே மாலயன் தேட
ஐயர்தாம் வெளியே யாடுகின் றாரை 
            அஞ்சலி மலர்த்திமுன் குவித்த
கைகளோ திளைத்த கண்களோ அந்தக் 
             கரணமோ கலந்தவன் புந்தச்
செய்தவம் பெரியோன் சென்றுதாழ்ந் தெழுந்தான்
            திருக்களிற் றுப்படி மருங்கு.                       (பெ.பு 251)

என்பது சேக்கிழார் பெருமான் வாக்கு.  இறை வழிபாடு செய்ய முதலில் அன்பு பெருகுகிறது, பின் மனம்  விழைகிறது, கண்கள் காண்கின்றன, பின் கைகள் குவிகின்றன. இதுவே ஒரு முறையாக செய்யப்படும் செயல்கள். ஆனால் இங்கோ, முன் செய்த  தவத்தால் பெரியோனாக விளங்கும் ஆரூரருக்கு, எது முன் நிகழ்ந்தது என்று அறியாதவாறு எல்லாம் ஒருங்கே நிகழ்ந்தது என்று கைகளோ, கண்களோ, கரணமோ என்று நயமுடன் உரை செய்கிறார் சேக்கிழார் சுவாமிகள். இவ்வாறு திருக்களிற்றுப்படியின் அருகிலே சென்று தாழ்ந்து வணங்கி எழுந்தார்.

 கனகசபையிலிருந்து சிற்சபை செல்லுவதற்கு ஐந்து படிகள் அமைந்துள்ளன. இந்த படிகள் பஞ்சாட்சர படிகள் என வழங்கப்படும். இப்படிகளின் இருபுறத்தும், இவற்றைத் தாங்கும் விதமாக கைகள் போன்று துதிக்கை உடைய யானைகள் அமைந்துள்ளன. ஆகையால் இதனை திருக்களிற்றுப்படி என்று வழங்குவது சைவ மரபாகும். களிற்றுக்கை பிரணவத்தையும், ஐந்து படிகள் திருஐந்தெழுத்தையும் குறிக்கும். திருக்கடவூர் உய்யவந்த தேவ நாயனார், திரு உந்தியாரின் வழிநூலாக தான் இயற்றிய நூலை இப்படியில் வைத்தபோது, இப்படியில் அமைந்த களிறுகள், இந்நூலை எடுத்து கூத்தப் பெருமான் திருவடியில் வைத்ததாகவும், அந்நூல் இதனால் திருக்களிற்றுப்படியார் எனப் பெயர் பெற்றதாகவும் வரலாற்றுச் செய்தி ஒன்று உள்ளது.

சந்திரன் வாழ்வடைவதற்கு ஏற்ற சடையினைத் தாங்கிய நடராஜப்பெருமான்  ஆடும் ஆனந்தக் கூத்தை தரிசித்து பேரானந்தத்தில் மூழ்குகிறார், சுந்தரமூர்த்தி சுவாமிகள். இந்தக் காட்சியை சேக்கிழார் பெருமான் அரும் பெரும் பொருள் கொண்டு  உரைக்கும் பாடல்  தில்லைகூத்தன் வழிபாடு எவ்வாறு நிகழ வேண்டும் என்று நமக்கெல்லாம் விளக்குகிறது.

ஐந்துபே ரறிவுங் கண்களே கொள்ள 
        அளப்பருங் கரணங்கள் நான்கும்
சிந்தையே யாகக் குணமொரு மூன்றும் 
        திருந்துசாத் துவிகமே யாக
இந்துவாழ் சடையான் ஆடுமா னந்த 
        வெல்லையில் தனிப்பெருங் கூத்தின்
வந்தபே ரின்ப வெள்ளத்துள் திளைத்து 
        மாறிலா மகிழ்ச்சியின் மலர்ந்தார்.     (பெ.பு.252)

மெய்,வாய்,கண்கள்,மூக்கு,செவிகள் என்ற ஐம்புலன்களும் ஒன்றுபட்டு, தம் கண்கள் மட்டுமே பற்றிக்கொண்டு, கூத்தனை தரிசனம் செய்ய,
அளத்தற்கு அறியதாகிய மனம்,புத்தி,சித்தம்,அகங்காரம் என்ற நான்கு உட்கருவிகளில் (அந்தக்கரணங்கள்) சித்தம் ஒன்றே செயல்பட்டு நிற்க,
சத்துவம், ராஜசம், தாமதம் என்னும் மூன்று குணங்களில் மற்ற இரண்டும் சாத்துவிகத்துள் அடங்கி நிற்க, 
 பேரானந்த, தாண்டவத்தை தரிசித்து, ஒப்பற்ற மகிழ்ச்சியில் திளைத்து மலர்ச்சியைப் பெற்றார் என்று ஆரூரர் பெற்ற அருள் காட்சியை நம் கண் முன்னே கொண்டு வருகிறார் சேக்கிழார் சுவாமிகள்.
 சுந்தரர்  கனகசபைக்குள்ளே எழுந்தருளும்போது, ஐம்புலன்களாகிய மெய்வாய்,கண்,மூக்கு,செவிகள், தத்தம் தொழிலைச் செய்துக்க்கொண்டிருக்கின்றன. நடராஜப் பெருமானை தரிசிக்க விழையும்போது, கண்களைத் தவிர மற்ற புலன்கள் தம் பணி மறந்து, கண்களுடன் ஒன்றின. பின் அகக்கண் கொண்டு ஆனந்தக் கூத்தனைத் தரிசிக்கிறார். அப்போது  மனம், புத்தி, அகங்காரம் என்ற மூன்றும், சித்தம் ஒன்றையே பற்றிக்கொள்ள, சித்தம் ஒன்றே செயல்படுகிறது. அப்போது அவர் சித்தம் நடராஜப் பெருமானுடைய திருஉருவக் காட்சியில் நிலைத்து நின்றது. அந்த நேரத்தில் இராஜசம்,தாமதம் என்ற இரண்டு குணங்களும் சத்துவத்தில் ஒடுங்கி, சத்துவம் ஒன்றே இயங்கியது.

இவ்வாறு நடராஜப் பெருமானுடைய ஆனந்த தாண்டவத்தை தரிசித்து, பேரானந்த சாகரத்தில் முழுகித் தம்மை முற்றிலும் இழந்து, அந்த ஆனந்த அனுபவத்தில் இரண்டறக் கலந்து விளங்கினார் என்பதை சேக்கிழார் பெருமானின் வாயிலாக நாம் முற்றிலும் உணர முடிகிறது.

இந்தப் பாடலுக்கு மற்றொரு முக்கியத்துவம் உண்டு. குமரகுருபரர், முருகப் பெருமானை தன் ஞானகுருவை அடையாளம் காட்டுமாறு வேண்டினார். முருகப் பெருமான்உன் வாக்கு வன்மை எவர் முன்பு தடைபடுகிறதோ அங்கே உன் குருவைக் காணலாம்என்றார். திருத் தருமபுரம் நா ன்காவது குருமூர்த்தியாகிய ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த குருமூர்த்திகளை குமருகுருபரர் தரிசனம் செய்தபோது, மேற்சொன்ன பாடலைக் கூறி அகப்பொருள் உரைக்கக் கூறினார்கள். அப்போது குமர குருபரர் வாக்கு தடை பட்டமையால்  அவருடைய குரு அடையாளம் காட்டப் பெற்றார் என்பது வரலாறு.

இவ்வாறு சுந்தரமூர்த்தியின் தில்லைக் கூத்தன் தரிசனம் செய்தமையை விளக்கிய சேக்கிழார் சுவாமிகள், திருவடி ஞானமாகிய சிவபோகத்தை அறிகின்ற ஐம்பொறி அறிவு பேரறிவாகும் என்று நமக்கெல்லாம் உணர்த்தி உய்யும் வழியைப் புலப்படுத்துகிறார். அவ்வழி சென்று நாமும் கூத்தன் அருள் பெறுவோமாக.


திருச்சிற்றம்பலம்