வெள்ளி, 25 ஆகஸ்ட், 2017

இந்தக் கட்டுரை,மார்ச் 2017 'பாம்பன் சுவாமிகள் ' மாத இதழில் வெளிவந்தது

சிவாயநம
நாவுக்கரசரின் தில்லை திருநடனக் காட்சி

திருநின்ற செம்மையே செம்மையாக் கொண்ட
 திருநாவுக் கரையன்தன் அடியார்க்கும் அடியேன்


நம்  திருமுறைகளில் முதல் ஏழு திருமுறைகள் பொதுவாக தேவாரம் என்று அழைக்கப்பட்டாலும்தேவாரம் என்ற சொல் நாவுக்கரசு நாயனார் அருளிய 4,5,6 திருமுறைகளை  மட்டுமே குறித்தது. காலப்போக்கில், திருக்கடைக்காப்பு, திருப்பாட்டு என்று பிரித்துப் பார்க்கும் வழக்கம் மறைந்து தேவாரம் என்ற சொல்லே முதல் ஏழு திருமுறைகளையும்  குறிக்கும் சொல்லாக உருப்பெற்றது. நாவுக்கரசு”  என்று பெருமானால் பெயர் சூட்டப்பட்டு, “அப்பரேஎன்று சிவக்குமாரராகிய ஞானசம்பந்தப் பெருமானால் அழைக்கப்பட்ட நாயனாரின் பதிகப் பெருமையை பறைசாற்றும் விதமாகவே இது அமைந்துள்ளது.

திலகவதியாரின் அருள் வாக்கோடு, சமணைத் துறந்து, சிவ பரம்பொருளை அடைய, தொண்டு நெறியை வழிக்கொண்டு வாழப்புகுந்தார் நாயனார். தமிழ் மொழித்தொண்டு, இறைத்தொண்டு, உழவாரப் பணி என்ற கைத்தொண்டு என்ற தொண்டு நெறிகளைப் பற்றிய கருத்துக்கள் நாயனாரின் பதிகங்களில் புதைந்து கிடப்பதை காணலாம். இவ்வாறு தொண்டு நெறியைக் கைக்கொண்டு சிவ பரம்பொருளைச் சிந்தையில் கண்டு இன்பமுற்றிருந்த  அப்பரடிகள், பெருமான் வீற்றிருந்த தலங்கள் பலவற்றினும் சென்று  இறைவனைக் கண்ணாரக் கண்டு களித்து, தமிழ்ப் பாமாலைகள் சூட்டி வந்தார். தலங்கள் பல சென்று வரும் நாட்களில்தில்லைஅம்பலவனின் திருநடனத்தைக் காண பெரும் ஆசை உண்டாயிற்று. சைவத் திருமரபில் தில்லையிற்சென்று சேர்தல் தனிச் சிறப்புடையது என்னும் கருத்தை மனதில் கொண்டு, பெண்ணாகடம், நெல்வாயில் அரத்துறை, திருமுதுகுன்றம் ஆகிய தலங்களில் வீற்றுள்ள பரமனைப் பாடிய வண்ணம்,பெருமகிழ்வெய்து, தில்லையை நோக்கி, நிவாநதிக்கரை (வெள்ளாறு) வழியே செல்லுகிறார்.
நாவுக்கரசு நாயனார் தில்லையை அடையும் காட்சியையும், தில்லைக்கூத்தனின் திருநடனத்தை கண்டு ஆனந்தம் மேலிடும் காட்சியையும்  சேக்கிழார் பெருமான்  நயமுடன் உரைக்கும்  தகைமை  பேரழகும் பெருஞ்சிறப்பும் கொண்டது.
திருஎல்லை என்பது தில்லை நகருக்கு ஒரு காத தூரத்தில் நாற்புரமும் உள்ள அமைப்பு. திருவெல்லையை அடைந்தவுடன் திருமேனி நிலம் பொருந்த வீழ்ந்து வணங்குகிறார். தில்லை நகரை அணுக அணுக உட்சென்று ஆனந்த நடனத்தை காணும் ஆசை பெருகுகிறதாம். இதையே சேக்கிழார் பெருமான் – “
 நாவுக்கரசர் இருவருக்கும் அரியவர் நடமாடிய திரு எல்லைபால், மேவித் தலம் உற மெய்யில் தொழுத பின் மேல் மேல் எழு தரும் விரைவோடும்…………” (பெ.பு 1422).  
என்று அழகுற  பதிவு செய்கிறார்.

நகரின் பல அமைப்புகளைக் கடந்து, நாயனார் பணிவுடனே தொழுதுக்கொண்டே அங்கு சேர்கிறார். இவர் திருவடிவினைக்கண்டு, அங்கு மரக்கிளைகளின் மேல் அமர்ந்துள்ள கிளிகள், இது அதிசயம் என்று சொல்லி, தில்லையை அடைந்து வணங்கும் எண்ணற்ற அடியார்கள் சொல்லக் கேட்ட பழக்கத்தால், கிளிகளும்அரகரஎன்று சிவமொழி முழக்கின. இந்த திருவடிவுடைய அடியவரைக் காணும் பேறு கிடைத்தமையால் அவை பெருமிதம் உற்று இது ஓர் அதிசயம் என்று கூறியதாம். அரகர என்று கிளிகளும் கூறியது சிவ மந்திரங்கள் ஆகும் என்று, அவை சிவ மொழிகளைச் சொல்லியதால், சிவனடியார் ஆகும் தகுதி பெற்றுவிட்டன என்று நாயனார் அவைகளையும் தொழுதார்.

நாவுக்கரசர், கோபுரத்தைக் கண்டு வணங்கி, கண்ணீர் மல்க, கோயிலின் மேலை வாயில் வழியாக உட்புகுந்தார். தில்லைவாழ் அந்தணர்கள் புடைசூழ ஆலயத்திற்குள் எழுந்தருளுகிறார்.
  
வளர்பொற் கனமணி திருமா ளிகையினை
              வலம்வந் தலமரும் வரைநில்லா
அளவிற் பெருகிய ஆர்வத் திடையெழும்
             அன்பின் கடல்நிறை உடலெங்கும்
புளகச் செறிநிரை விரவத் திருமலி
             பொற்கோ புரமது புகுவார்முன்
களனிற் பொலிவிடம் உடையார் நடநவில்
             கனகப் பொதுஎதிர் கண்ணுற்றார். (பெ.பு 1430)

வலம் வருவதற்கு முன்னமே, பேராவல் பெருகி, திருமேனி புளகாங்கிதப்பட்டு, மயிர்க்கூச்சுப் பரவ, திருநடனம் நிகழும் கனகசபையாகிய பொன்னம்பலத்தை தம் கண்களால் தரிசித்தார்கோயில் வலத்தை எப்போது முடித்து உள்ளே புகுவோம் என்ற மன நிலையில் பேராவல் பெருக நின்றாராம் நாவுக்கரசுப் பெருமான்.

கையும்  தலைமிசை புனை அஞ்சலியன
கண்ணும் பொழி மழை ஒழியாதே
பெய்யும் தகையன கரணங்களும் உடன்
உருகும் பரிவின  பேறு எய்தும்
மெய்யும் தரைமிசை விழுமுன் எழுதரும்
மின்தாழ் சடையொடு நின்றாடும்
ஐய்யன் திருநடம் எதிர் கும்பிடும் அவர்
ஆர்வம் பெருகுதல் அளவு இன்று ஆல். (பெ.பு. 1432)

தில்லை அம்பலவனின் திருநடனத்தை தரிசிக்கும்போது, அவருடைய கைகள் தலையின் மேல் அஞ்சலியாக கும்பிட்டுக்கொண்டிருந்தன. விழிகளில் மழையைப் போல இடைவிடாது கண்ணீர் பொழிந்துக் கொண்டிருந்தது. கூத்தப் பெருமானின் பாத கிண்கிணிகள் பரதமாட, அரவணிந்த அழகிய வெண்ணீறு அணிந்து விளங்கும் மலர்க்கரங்கள் அபினயத்தோடு தெரிவது கண்டார். அகக்கரணங்களும், புறக்கரணங்களாகிய திருமேனி உறுப்புகளும் ஒருசேர பேராவல் பெருகி எழ, அன்பினால் உருகி  கீழே விழுந்து வணங்குவார். இந்த வணக்கம் முற்றுப் பெறுவதற்கு முன்பே  மீண்டும் விழுந்து வணங்க முற்படுகிறார்.. நாயனாரின் ஆர்வம் மிகப் பெருகி, அளவு கடந்து நின்றதனால் இவ்வாறு நிகழ்ந்தது எங்கிறார் சேக்கிழார் பெருமான்.

இவ்வாறு பலமுறையும் தொழுது எழும்போது, இறைவனுடைய திருமுகக்  குறிப்பு ஒன்று தோன்றுகிறது நாயனாருக்கு. “என்றெய்தினை என்”  என்பது இறைவனின் திருமுக க் குறிப்பாக நாயனாருக்குத் தோன்றுகிறது. “என்று வந்தாய், வருக” என்று இறைவன் அவருடைய வருகையை ஏற்றுக் கொண்டார் என்பது சேக்கிழார் பெருமானின் வாக்கு.

இத்தன்மையர் பலமுறையும் தொழுது எழ
என்று எய்தினை என மன்று ஆடும்
அத்தன் திருவருள் பொழியும் கருணையின்
அருள் பெற்றிட வரும் ஆனந்த
மெய்த்தன்மையினில் விருத்தத் திருமொழி
பாடிப் பின்னையும் மேன்மேலும்
சித்தம் பெருகிய பரிவால் இன்புறு
திருநேரிசை மொழி பகர்கின்றார்.       (பெ.பு. 1433)

இவ்வாறு மூர்த்திகளின் திருஉருவை வணங்குபவர்கள்  தங்களை பக்குவப் படுத்தித் தகுதியை ஏற்படுத்திக் கொண்டால் இறைவனுடைய திருக்குறிப்பு  தோன்றும் ; அவற்றை உணரவும் முடியும், என்பதே இங்கு பொதிந்துள்ள உண்மை.

ஒன்றியிருந்து நின்று தொழுதலால் இறைவரது தன்மை அவருக்கு விளங்கிற்று. அவ்வாறு மெய்மறந்து நின்ற நிலையில்  “ பத்தனாய் பாட மாட்டேன்” என்று தொடங்கும்  இனிய தமிழ் மாலையைச் சூட்டுகிரார்.

ஒன்றி யிருந்து நினைமின்க ளுந்தமக் கூனமில்லை
கன்றிய காலனைக் காலாற் கடிந்தா னடியவற்காச்
சென்று தொழுமின்கள் தில்லையுட் சிற்றம் பலத்துநட்டம்
என்றுவந் தாயென்னு மெம்பெரு மான்றன் றிருக்குறிப்பே. (4-81-2)

என்று நாவுக்கரசுப் பெருமான் இறைவனுடைய திருக்குறிப்புப் பெற்றதை இங்கு பதிவு செய்கிறார்.  தான் பெற்ற திருக்குறிப்பை நீங்களும், ஒன்றியிருந்து தொழுவீர்களேயானால் பெறலாம் என்று உலக உயிர்களுக்கும் எடுத்து உரைக்கின்றார்.

மற்றும் இப் பதிகப் பாடல்களில் தான் கண்ட சிற்றம்பலக்காட்சியை பலவாறு தெளிவு படுத்தி, உலகவர் உய்யவும் வழி வகுக்கிறார்.
“……………………………..றில்லையுட் சிற்றம் பலத்துநட்டம்
பொன்மலை யில்வெள்ளிக் குன்றது போலப் பொலிந்திலங்கி
என்மன மேயொன்றிப் புக்கனன் போந்த சுவடில்லையே.

 குனித்த புருவமுங் கொவ்வைச்செவ் வாயிற் குமிண்சிரிப்பும்
பனித்த சடையும் பவளம்போன் மேனியிற் பால்வெண்ணீறும்
இனித்த முடைய வெடுத்தபொற் பாதமுங் காணப்பெற்றால்
மனித்தப் பிறவியும் வேண்டுவ தேயிந்த மாநிலத்தே.

என்று திருநட்ட நிலையைக் கண்டு தன் உள்ளம் பறிகொடுத்தார்.

முடிகொண்ட மத்தமு முக்கண்ணி னோக்கு முறுவலிப்புந்
துடிகொண்ட கையுந் துதைந்த வெண்ணீறுஞ் சுரிகுழலாள்
படிகொண்ட பாகமும் பாய்புலித் தோலுமென் பாவிநெஞ்சிற் 
குடிகொண்ட வாதில்லை யம்பலக் கூத்தன் குரைகழலே.

தீவினையை ஈட்டிய என்னுடைய உள்ளத்தில் கூத்தப்பிரானின் திருஉருவம் நிலையாக இடம் பெற்றுவிட்டது என்று தன் அனுபவத்தை எடுத்துச் சொல்லுகிறார். எழு பிறப்புகளில் எந்தப் பிறப்பு எடுத்தாலும் அப்பிறப்பிற்கேற்ப உனக்கு தொண்டு செய்கிறேன். நீ என்னை விலக்கினாலும் நான் உன்னை விட்டு அகலேன் என்று பலவாரும் தொழுது அழுது புலம்புகிறார் தில்லைக் கூத்தனின் முன்னின்று.

தில்லை அம்பலவனின் அருள் உணர்ந்ததனால்  மகிழ்ச்சி பொங்க “அன்னம் பாலிக்கும்” என்னும் திருக்குருந்தொகை சூட்டி மகிழ்ந்தார். தில்லைக் கூத்தன் திருக்கோயிலை வலம் வந்தால் அன்பு ஆலிக்கச் செய்யும். அதைக் கண்டு இன்புற இப்பூமிசை இன்னம் இப்பிறவியை பாலிக்குமோ என்று வியந்து வேண்டுகிறார். தில்லையில் சிலகாலம் தங்கியிருந்து உழவாரப் பணிகள் பல புரிந்து பின் தன் தல யாத்திரையைத் தொடர்ந்தார் நாவுக்கரசு நாயனார்.



திருச்சிற்றம்பலம்